தமிழகத்தில் கடல்சார் பயன்பாடுகள் பொறுப்புமிக்கதாக இருத்தல் வேண்டும்.. எ.வ.வேலு பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் கடல்சார் பயன்பாடு பொறுப்புமிக்கதாக இருக்க வேண்டும் என பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடல்சார் பகுதிகளை பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த பயிலரங்கு சென்னையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த பயிலரங்கை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில் 1,076 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது மிக நீளமான கடற்கரை தமிழகத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த கடற்கரையில் 13 சதவீதத்திற்கும் அதிகமான அளவு தமிழகத்தில் உள்ளது. சோழர்கள் காலத்திலிருந்தே தமிழ்நாடு கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது.
மற்ற கடலோர மாநிலங்களைப் போன்று இல்லாமல் தமிழ்நாட்டின் கடலோரத்தில் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள், தீவுகள், சுற்றுலா, ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், பறவைகள் சரணாலயங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. கடல்சார்ந்த இடங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பயன்பாடு பொறுப்புமிக்கதாகவும் நிலைத்திருப்பதாகவும் இருத்தல் வேண்டும் என எ.வ.வேலு பேசியிருந்தார். தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி 42.7 சதவீதம் கடலோர பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது, 332 கி.மீ. மட்டுமே சீராக இருக்கிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 16.16 கி.மீ. நீளம் கடலோர பகுதி அரிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் அரிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக கடலோரம் குறித்து 80 வரைப்படங்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் மி.வி. ரமணாமூர்த்தி கூறுகையில், கடலோர பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு கடலோர மாற்றங்கள் அதன் தன்மை உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications