சங்கீத வித்வான் என்றால் கேவலமா?.. ஞானம் பெற்றவர்கள் என அர்த்தம்!.. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் நன்றி
சென்னை: சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா, அவர்கள் ஞானம் பெற்றவர்கள் என ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
2019-2020 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 86 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் புத்தகத்தை 2 மணி 38 நிமிடங்களில் வாசித்தார்.
இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் மக்களுக்கு உதவாக்கரை பட்ஜெட். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. ஏதோ சங்கீத வித்வான் போல் பட்ஜெட்டை ஓபிஎஸ் வாசித்து விட்டு சென்றுவிட்டார் என ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
அனைவருக்கும் பயன்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் மீனவர்கள், எளியவர்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்டி, எஸ்சி பிரிவினர் என அனைத்து தரப்பினருக்கும் நல்ல திட்டங்களை வழங்கும் திட்டமாகவே இந்த பட்ஜெட் உள்ளது.
7 ஸ்வரங்கள்
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் சொல்வது போல் ஏட்டுச் சுரக்காய் அல்ல. இந்த பட்ஜெட் எல்லோருக்கும் உதவக் கூடிய நாட்டு சுரக்காய். சங்கீத வித்வான் என்றால் கேவலமா என்ன. அவர்கள் ஞானம் பெற்றவர்கள். அதாவது "ச, ரி, க, ம, ப, த நி, ச" ஆகிய 7 ஸ்வரங்கள் குறித்து அறியாத ஸ்டாலின் சங்கீதம் குறித்து பேசவே கூடாது.
காதுகளுக்கு இனிமை
தமிழக பட்ஜெட்டின் மூலம் தமிழக மக்களின் காதுகளுக்கு இனிமையான ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ் என்பதை மறைமுகமாக சங்கீத வித்வான் என கூறிய ஸ்டாலினுக்கு நன்றி. மிகவும் இனிப்பான பட்ஜெட் இது.
ரூ. 5000 கோடி குறைவு
பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது தமிழக பட்ஜெட். மாநில வருவாய் பற்றாக்குறை ரூ 5000 குறைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கியது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா?. ரூ 5000 கோடி குறைவு என்பது நல்ல கண்கள் உடையவர்களுக்கு நல்லவிதமாக தெரியும், காமாலைக்காரர்கள் கண்களுக்கு எப்படி தெரியும்? என்றார் ஜெயக்குமார்.