ஆஹா.. தமிழகத்தின் புதிய மாநகராட்சி இந்த நகரமா? சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில்!
சென்னை: ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவெடுக்கப்படும் என்ற தகவலையும் சட்டசபையில் அவர் வெளியிட்டார்.
ஏற்கனவே தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் தமிழகத்தின் 22-வது மாநகராட்சியாக அது திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை
தமிழக சட்டசபையில் இன்று பிற்பகல் மிகவும் முக்கியத் துறைகளில் ஒன்றான மின்சாரத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் உடுமலைப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா எனக் கேள்வி எழுப்பியதுடன் கோரிக்கையும் விடுத்தார்.

அமைச்சர் நேரு
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்த பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இதுமட்டுமல்லாமல் ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைப்பது பற்றி ஊராட்சி மன்றத் தலைவர்களின் பதவிக்காலம் முடிவடையும் போது பரிசீலிக்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

பரிசீலிக்கப்படும்
மேலும், இதேபோல் பேரூராட்சிகளை அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைத்து நகராட்சிகளாக மாற்றுவது பற்றியும் ஆய்வு செய்து பரிசிலீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 138 நகராட்சிகள் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், இவைகளின் எண்ணிக்கை இன்னும் 4 ஆண்டுகளில் மேலும் உயரக்கூடும் என்பது அமைச்சர் நேருவின் பதிலில் இருந்து சூசகமாக உணர முடிகிறது.

மக்கள் முடிவு
இதனிடையே ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைக்க மக்கள் மத்தியில் என்ன மாதிரியான கருத்துக்கள் எழப்போகிறது என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் வரி விதிப்பில் ஊராட்சிகளை காட்டிலும் நகராட்சி, மாநகராட்சிகளில் அதிக சதவீதம் செலுத்த வேண்டும் என்பதால் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறக்கூடும்.












Click it and Unblock the Notifications