அதிகாரிகளுக்கு ''காக்னிசென்ட் '' லஞ்சம் அளித்ததா... பதிலளிக்க மறுத்த அமைச்சர் எம்.சி.சம்பத்
Recommended Video
சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் கட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்க மறுத்துள்ளார்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொழில்தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படுவதாகவும், முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் தமிழகத்திற்கு எட்டாயிரத்து 800 கோடி ரூபாய்க்கு முதலீகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைவாக தான் இருப்பதாகவும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வேலைவாய்ப்புகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, காக்னிசென்ட் நிறுவனம் லஞ்சம் அளித்தத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதை அவர் செவியில் விழாதபடி தனது கருத்தை மட்டும் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் கோரஸாக செய்தியாளர்கள் காக்னிசென்ட் விவகாரத்தை பற்றி கேள்வி எழுப்பத்தொடங்கினர், உடனடியாக நேரமாகிவிட்டதாக கூறிய அமைச்சர் எம்.சி.சம்பத் சிரித்தபடியே சமாளித்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததை ஒப்புக்கொண்டு காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதிகாரிகளின் பெயரை வெளியிடக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications