நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று.. எவ்வளவு தீவிரமான பாதிப்பு? அமைச்சர் மா.சு முக்கிய தகவல்
சென்னை: தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில் மட்டுமே கொரோனா உயிரிழப்பவர்கள் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்தும் முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்
சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெறும் 11ஆவது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அங்கே தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐடீரிம்ஸ் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மெகா வேக்சின் முகாம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தக் கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திடீரென அதிகரிப்பு
60 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்குக் காரணம் எனவே தடுப்பூசி செலுத்தப் பொதுமக்கள் முன்வர வேண்டும்.

உலக நாடுகள்
கடந்த 7 நாட்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் இங்கிலாந்தில் 75% பேர் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். ஆனால் 2.84 லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ரஷ்யாவில் 44% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த 7 நாட்களில் 2.57 லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். 8,739 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் 30% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 1.11 லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

சென்னையில் மாஸ்க்
மேலும், சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாஸ்க் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆறுதல் அளிக்கும் விதமாகச் சென்னையில் உள்ள மால்களில் 51% பேர் முக கவசம் அணிகின்றனர்.

கமல் கொரோனா பாதிப்பு
ஒட்டு மொத்த பொதுமக்களைக் காப்பதற்காக அரசு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியது. படத்தின் தயாரிப்பாளர் கூறுவது போல் குறிப்பிட்ட ஒரு படம் வெளியாகிறது என்பதற்காக இல்லை. 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானாலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதனால் தான் பொது இடங்களில் வருவோருக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என கூறினார்.

கமல் உடல்நிலை
சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அங்கு கமலுக்குச் சிறப்பு மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து சீரான நிலையிலேயே உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications