டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்?.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
Recommended Video
அதன்படி 27 மாவட்டங்களில் 15-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பேய் பிடித்ததாக கூறி பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ.. போலி சாமியார் கைது
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கொரோனா தொற்று முழுமையாக குறையும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து தமிழ்நாடு நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மா.சுப்பிரமணியன் விளக்கம்
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டே மாநில வருவாய்த் துறை மதுபான கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. ஆனால் இப்போது கொரோனா உச்சத்தில் இல்லை. இந்தியாவிலேயே கொரோனா உச்சத்தில் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்று நினைக்கிறன். தேநீர் கடைகள் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
தடுப்பூசிகள் இலக்கு
இதனையடுத்து நிருபர்களிடம் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இதுவரை 1.6 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக இன்று 1.26 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும், 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வரவுள்ளன. இன்று மாலைக்குள் தமிழ்நாட்டில் 1 கோடி தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கோரிக்கை
சென்னை மாநகராட்சியில் மட்டும் தடுப்பூசியால் 21,63,213 பேர் பயன் அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரை 9,655 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5000 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும்போது தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.