அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. அன்னதானம், பிரசாதங்களை கொடுக்கும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: கோயில் விழாக்களில் அன்னதானம், பிரசாதம் வழங்க இருக்கும் பக்தர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சித்திரை திருவிழா வரும் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை நதியில் இறங்கும் வைபவமும் நடக்கும். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மதுரை சித்திரை திருவிழாவை பொருத்தமட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மதுரை மாநகர சுகாதார அலுவலர், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இந்த விழாவில் எந்த விதமான தொற்று நோய் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திருவிழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள் மற்றும் 160 சிறப்பு பணியாளர்கள், கூடுதலா 1800 பேர் என தூய்மை பணியில் ஈடுபடுவர்.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதை உறுதி செய்ய 23 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படும். தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்கள், புழுக்கள், அதன் முட்டைகளை நீக்க பணிகள் நடைபெறுகிறது.
மக்கள் கூடும் இடங்களில் புகை மருந்து அடித்தல், கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்டவையும் நடைபெறுகிறது. அது போல் ஆங்காங்கே குவிக்கப்படும் உணவு கழிவுகளில் ஈக்கள் குவியும். அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருவிழா காலங்களில் உணவகங்கள், அன்னதானம் செய்யும் இடங்கள, குளிர்பானம் தயாரிக்கும் இடங்கள் உள்ளிட்டவை சுகாதாரமாக இருக்கின்றனவா என்பதை 7 சிறப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

கள்ளழகரை ஒட்டி ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனமும் பயணிக்க உள்ளது. கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாதங்கள், சர்பத், மோர், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதா என கண்காணிக்கப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை முழுமையாத தவிர்க்கப்பட வேண்டும்.
திருவிழாவின் போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும். உணவு, குளிர்பானங்கள் விவகாரத்தில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் கொடுக்க வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications