லண்டன்.. இத்தாலி.. துபாய்.. எல்லாமே அரசு முறை பயணம்! ஃபாரின் டூரில் கலக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!
சென்னை: 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
ஏற்கனவே 5 மாதங்களுக்கு முன்பு தான் லண்டன், இத்தாலி என அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு டூர் சென்றிருந்த இவர் இப்போது துபாய் சென்றிருக்கிறார்.
தமிழக அமைச்சரவையிலேயே அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், மனோ தங்கராஜும் தான் அதிகளவில் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றவர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுகளை நிஜமாக்குவோம்! அமைச்சர் மனோ தங்கராஜ் மிகத் திட்டவட்டம்!
GITEX கண்காட்சி
GITEX (Gulf Information Technology Exhibition) - எனும் "வளைகுடா தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி", ஆண்டுதோறும் உலகளவில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாகும். சுமார் 170 நாடுகளில் இருந்து அரசு சார்ந்த துறைத் தலைவர்கள், அமைச்சர்கள், தனியார் துறையினர், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முன்னோடிகள் போன்ற பலர் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சி, துபாய் உலக வர்த்தக மையத்தில் கடந்த 10 ஆம் தேதி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மனோ தங்கராஜ்
உலகம் முழுவதும் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள், யோசனைகள் மற்றும் முயற்சிகள் மூலம் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சூழல்களை ஒருங்கிணைக்கும் தளமாக இந்தக் கண்காட்சி அமைந்திருக்கிறது. எந்தவொரு தடையும் இன்றி தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கடைக் கோடி மக்களுக்கும் சென்றடையும் முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வரும் நிலையில் இது போன்ற கண்காட்சியில் பங்கேற்க வேண்டிய அவசியம் பற்றி அமைச்சர் மனோ தங்கராஜிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
துபாயில் அமைச்சர்
உடனடியாக இந்த விவரத்தை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்து சென்று வர அனுமதி அளித்திருக்கிறார். இதையடுத்து நேற்று முன் தினம் திமுக பொதுக்குழு முடிந்த கையோடு அன்றிரவே அதிகாரிகளுடன் துபாய் புறப்பட்டுச் சென்றுவிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ். இவர் ஏற்கனவே லண்டனுக்கும், ரோம் (இத்தாலி) நகருக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத் துறை
இப்போது மீண்டும் துபாய்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனிடையே இன்னும் பல அமைச்சர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு முறை கூட கிடைக்காத நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம் அவர் வகித்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறை பதவி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை உலகளாவிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.