முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே.. தமிழிசைக்கு மனோ தங்கராஜ் கேள்வி
சென்னை: புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஏன் சொல்ல மறுக்கிறார்? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில்,
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது.
அதில், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜனை ஒப்பிட்டு சில வாக்கியங்கள் இடம்பெற்றதால் அவர் கொதிப்படைந்தார்.
பெரியாழ்வார் மண்.. “பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்” - தமிழிசை பரபர பேச்சு!
முரசொலி கட்டுரை
முரசொலியில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக வெளியான கட்டுரையில், "ஒன்றிய அரசின் அரசியல் நியமனமாக விளங்கும் ஒற்றை நபர், வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலச் சட்டங்களை தடுத்து நிறுத்தி காலதாமதப்படுத்தி, அதிலே அரசியல் செய்வதை எந்த அரசு தான் ஏற்கும்.
தமிழிசை நிலைதான்
இரண்டு அதிகார மையங்களின் மோதலில் மக்கள் துன்பப்பட கூடாதே என்ற நல்லெண்ணத்தில் மாநில அரசு விட்டுக் கொடுத்துப் போக நினைக்கலாம் எனவும் இந்த மோதல் போக்கு நீடித்தால், ஆளுநர் தமிழசைக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்." என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழிசை கருத்து
இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்திரராஜன், "நான் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் எங்கும் அவமதிக்கப்படவும் இல்லை, அலறவும் இல்லை. நான் அப்பிராணியும் கிடையாது. அப்பாவியும் கிடையாது. புலியை முறத்தினால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான். வாய்விட்டு அழுவதும், தலைகுனிவது என்னுடைய சரித்திரத்தில் இல்லை." என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், "புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்" என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த வரலாற்றை ஏன் சொல்ல மறுக்கிறார்? 2022 தோள்சீலை போராட்டம் ஆரம்பித்து 200-வது ஆண்டு." என்று பதிவிட்டுள்ளார்.