தமிழகத்தில் அறிமுகமாகும் சொகுசு கப்பல் சுற்றுலா! ஆழ்கடலுக்கு சென்று வரும் 2 நாள் டூர்! ஹைய்யா ஜாலி!
சென்னை: சென்னையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் மாதம் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் இதன் மூலம் தமிழக சுற்றுலாதுறைக்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலும் இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இது போன்ற சொகுசு கப்பல் சுற்றுலா திட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயணத் திட்டம்.. சுற்றுலா துறை அமைச்சர் அறிவிப்பு
சுற்றுலாத் துறை
தமிழகத்தில் சுற்றுலாத்துறை மூலம் அரசுக்கு வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தென் மாநிலங்களை பொறுத்தவரை கேரளாவுக்கு அடுத்தப்படியாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் மாநிலம் தமிழகம். இதனால் தான் சுற்றுலா தலங்களை பேணி பராமரிப்பதில் அரசு அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை, மேகமலை, என மலைவாசஸ்தலங்களின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் கடல் சுற்றுலாவிலும் அரசு அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.
சொகுசு கப்பல்
அந்த வகையில் சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக சொகுசு கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இதனை
உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் மதிவேந்தன் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் முன் கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடலுக்கு சென்று திரும்பும் சுற்றுலா திட்டமானது தமிழக வரலாற்றில்,
குறிப்பாக திமுக ஆட்சியின் சாதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும்.
மும்பை மாநாடு
இதனிடையே மும்பையில் நடைபெற்ற சர்வதேச கப்பல் சுற்றுலா மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
இதனிடையே தமிழகத்தில் அறிமுகமாகவுள்ள சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்துக்கு அரசு எவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
மக்களிடம் வரவேற்பு
ஆழ்கடல் பகுதிக்கு 2 நாள் பயணமாக சொகுசு கப்பலில் சென்று வரும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவற்பை பொறுத்து இதனை விரிவாக்கம் செய்ய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.