சைவம், வைணவம் சர்ச்சை பேச்சு! தடுமாற்றத்தால் பேசிவிட்டேன்! மன்னிப்பு கேட்டார் பொன்முடி
சென்னை: சர்ச்சைக்குரிய பேச்சு பேசியதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீண்ட பொது வாழ்வில் உள்ள எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் ஆபாசமான கருத்துகளை பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பேசிய காணொலி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இதற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அவரது துணை பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்து உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் பொன்முடி.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி: பொன்முடியின் அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் திமுக அமைச்சர் பொன்முடி அருவருக்கத்தக்க வகையில் பெண்களை, இந்துக்களின் நம்பிக்கைகளை இழிவு படுத்தும் வகையில் பேசியதும், அதன் காரணமாக திமுக பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் நாம் அறிவோம்.
ஆனால் இத்தகைய இழிவான கருத்தை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர் பேசுவது ஏற்புடையதே அல்ல. மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த காரணத்திற்காகவே அவரது அமைச்சர் பதவியை நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியின் பெண்கள் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பாக வருகின்ற 15-ம் தேதி மாலை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மையங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சைவ, வைணவ பெரியோர்களும், ஆன்மிகச் சான்றோர்களும், அனைத்து சமுதாயத் தலைவர்களும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
தமிழகத்தில் இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே இனி வருகின்ற காலத்திலே இதுபோல் அருவருக்கக்தக்க வகையில் யாரும் பேச மாட்டார்கள்.
எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பெரியவர்களும், தாய்மார்களும், சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications