புதிய துணைவேந்தர்.. விரைவில் உலக தரத்திற்கு செல்லும் அண்ணா பல்கலைக்கழகம்... அமைச்சர் பொன்முடி உறுதி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தைச் சர்வதேச தரத்தில் உயர்த்தி, பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராகப் பேராசிரியர் வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக வேல்ராஜ் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

துணை வேந்தர் வேல்ராஜ்
அப்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உடன் இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சர்வதேச அளவில் உயர்த்துவதோடு, கல்வி ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச தரம்
மேலும், Blended (கற்றல் & கற்பித்தல்) முறையைப் புகுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தொழிற்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், ஆராய்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சர்வதேச தரத்தில் உருவாக்க வேண்டும் என்று கூறினோம்.

நம்பிக்கை உள்ளது
வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் எனத் துணை வேந்தர் உறுதியளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தைப் பன்னாட்டுப் பல்கலைக்கழகமாக உயர்ந்த தரத்தில் புதிய துணைவேந்தர் வேல்ராஜ் உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

கல்லூரி திறப்பு
அனைவரும் கலந்து பேசி ஒற்றுமையான சூழலை அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டும். கல்லூரிகளில் இப்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications