விஷயம் மேல போயிடுச்சு.. ஆளுநர் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வது அவருக்கு நல்லது : அமைச்சர் பொன்முடி
சென்னை : தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை செய்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளோம். ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், "மாநில அரசை ஆலோசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். ஆளுநர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்." என தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிடப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநில கல்விக் கொள்கையை வகுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்துள்ளது அம்மாநில அரசு. ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications