சர்.சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் தேசிய அறிவியல் தின விழா! அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பு!
சென்னை: சென்னையில் நடத்தப்படும் தேசிய அறிவியல் தின விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்பதோடு அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
மறைந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்படுகிறது. சர்.சி.வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் இந்த பிப்ரவரி 28 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கிறார். அதேபோல் அறிவியலாளர்கள் லெனின் தமிழ்கோவன், கோமதி, சுடலை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
மாணவர்கள் மத்தியில் அறிவியல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெறும் தேசிய அறிவியல் தின விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ராஜகண்ணப்பன் பங்கேற்கும் முதல் தேசிய அறிவியல் தின விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேசிய அறிவியல் தினத்தை பொறுத்தவரை தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுவால் கடந்த 1986 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் அறிவியல் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவும் அறிவியலாளர்களை ஊக்கப்படும் வகையில் இந்த நாளில் தேசிய விருதும் டெல்லி விக்யான் பவனில் வழங்கப்படுகிறது. அதே போல் அறிவியலில் பெண்கள், அறிவியலில் மாணவர்கள், அறிவியலில் இளைஞர்கள் என்ற வெவ்வெறு கருப்பொருள்களில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினம் கொண்டாப்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications