அரிசி கடத்தல்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை! பொதுமக்கள் புகார் கூற சிறப்பு எண் -அமைச்சர் சக்கரபாணி
சென்னை: தமிழகத்தில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப் பட்டுள்ளது.
அரிசி கடத்தல்காரர்கள் தாங்களாகவே திருந்தி தங்கள் செயலை கைவிட வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

அரிசி கடத்தல் வழக்கு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 12,637 அரிசி கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன; 12,721 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 128 பேர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்; 90,122 குவிண்டால் அரிசி கையகப்படுத்தப்பட்டு 2607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

எல்லையோர மாவட்டங்களில்
எல்லையோர மாவட்டங்களில் கடந்த காலத்தை விட நான்கு மடங்கு வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி கடத்தலுக்குத் துணை போன அரிசி ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
பயோ டீசல் கலப்படத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை அளவு அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

நுகர்பொருள் வாணிபக் கழகம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மண்ணென்ணை மற்றும் பாமோலின் ஆகிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்காணிப்பதற்காக கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்ட 2,869 கண்காணிப்புக் கேமராக்களில் பெரும்பாலானவை சரியான முறையில் இயங்கவில்லை.

2,869 சிசிடிவி
ஆதலால், பொது விநியோகத் திட்ட பொருள்கள் சரியான முறையில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேருவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் பொருத்தப்பட்டுள்ள 2,869 கண்காணிப்புக் கேமராக்களைப் பராமரித்துச் சரியான முறையில் இயங்கிடுவதை உறுதி செய்திட தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

புகார் எண்
பயனாளிகள் மட்டுமே அரிசி பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அரிசி வாங்கி தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர்கள் யார் என்பதைக் கடைகள் வாரியாகக் கண்டறிந்து அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அரிசிக் கடத்தலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொது விநியோகத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் முழு ஈடுபாட்டுடன் ஒத்துழைத்தால் தான் அரிசிக் கடத்தலை அறவே தடுக்க முடியும். குடிமைப்பொருள்கள் கடத்தல் தொடர்பாக தகவல் அளிக்க விரும்புபவர்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 வழியாகவும் தெரியப்படுத்தலாம்.

ஒத்துழைப்பு தேவை
கடத்தலில் வாடிக்கையாக ஈடுபட்டுள்ளோர் தங்கள் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொது விநியோகத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலர்கள், விற்பனையாளர்கள், அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள், அரிசிக் கிடங்கு பாதுகாப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications