‛ப்ரீ’.. டோல்கேட்டில் பத்திரிகையாளர்களுக்கு இலவசம்? அமைச்சர் சாமிநாதன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழகத்தில் பத்திரிகையார்களின் நலனுக்காக மாநில அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தான் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக செய்தித்துறை அமைச்சர் முபெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக இருப்பவர் முபெ சாமிநாதன். இவர் சட்டசபை மானியக்கோரிக்கையின் போது பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி மூன்று லட்சம் ரூபாயிலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

மேலும் தொழிற்தகுதி, திறன் மேம்பாடு, மொழித்திறன், நவீனத் தொழில்நுட்பம் குறித்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது', ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இதுதவிர மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை நிறைவேற்றும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை தர ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் முபெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக முபெ சாமிநாதன் கூறுகையில், ‛‛சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு என்பது செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications