கலைஞர் கனவு இல்லம்.. தமிழகம் முழுவதும் இலவச வீட்டு மனை பட்டா.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தினை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் பொருட்டு, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் பணிபுரியும் 3,078 நிலஅளவைப் பணியாளர்களுக்கு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரவு அட்டைகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் , கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என சட்டசபையில் தெரிவித்தார்.
கலைஞர் கனவு இல்ல பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவோருக்கு பட்டா நிலம்இல்லை என்றால், அரசே அந்த நிலத்தை அந்தந்த மாவட்டங்களில் தேர்வு செய்து வழங்கும் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட துறை ரீதியான அறிவிப்புகளின் விவரம் வருமாறு:
தேனி, நெல்லை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் நிலஅளவை உதவி இயக்குனர் அலுவலகக் கட்டிடங்கள், மதுரை மண்டல துணை இயக்குனர் அலுவலகக் கட்டிடம் மற்றும் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் கட்டிடம் ஆகியவை ரூ.71.90 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
நில ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க, 80 வட்டாட்சியர் அலுவலகங்களின் ஆவணக் காப்பறைகளில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் "காம்பாக்டர்கள்" நிறுவப்படும்.
கடந்த 2024ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 4 மாவட்டங்களில் நவீன நிலஅளவைக் கருவிகளைப் பயன்படுத்தி நிலஅளவைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தினை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் பொருட்டு, அந்த மாவட்டங்களில் பணிபுரியும் 454 நிலஅளவைப் பணியாளர்களுக்கு ரூ.27.24 கோடி மதிப்பீட்டில் வகையீட்டு பூகோள நிலைக்கலன் கருவிகள் வழங்கப்படும்.
இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தினை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் பொருட்டு, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் பணிபுரியும் 3,078 நிலஅளவைப் பணியாளர்களுக்கு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரவு அட்டைகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள பூமிதான நிலங்களில் தகுதியான நிலங்களைத் தேர்வு செய்து, பூமிதான சட்ட விதியின் கீழ் இலவசமாக வீட்டுமனை வினியோகப் பத்திரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் எஸ்டேட், இனாம் போன்ற பல்வேறு ஒழிப்புச் சட்டங்களின் கீழ் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மனைவரி பதிவேடுகள் தயார் செய்யப்பட்ட 40 கிராமங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு, தகுதியான 10,000 குடும்பங்களுக்கு, ரயத்து மனைகளாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில், 6 வருவாய் கிராமங்களில் உள்ள 31,117 பயனாளிகளுக்கு நிலவரித் திட்டப் பணிகளை மேற்கொண்டு பட்டாக்கள் வழங்க ரூ.84.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.












Click it and Unblock the Notifications