எங்கும் குறை.. குவியும் புகார்கள்.. கிளாம்பாக்கத்திற்கு வந்த சேகர்பாபு.. சுவரை இடிக்க உத்தரவு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக இருந்த மற்றொரு சுவரையும் இடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு உள்ளாக 2 சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் கட்டப்பட்டது. மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்து 48 மணி நேரம் தான் ஆகிறது. அங்குள்ள குறைகள் 2-3 நாட்களில் சரிச்செய்யப்படும் என்றார்.
தினந்தோறும் கண்காணிக்கிண்றோம். பயணிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று செய்தி வரும் அளவிற்கு பணிகள் முடிக்கப்படும். பேருந்து முனையத்தில் ஏதேனும் இருந்தால் கூறுங்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த பீதியினை ஊடகங்கள் கிளப்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சேகர் பாபு.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தான் இத்திட்டம் என்று கூறினார் சேகர் பாபு. இதனிடையே இங்கு மாநகர பேருந்துகள் வந்து செல்லும் இடத்தில் இருந்து வெளியூர் செல்ல இடைஞ்சலாக தடுப்பு சுவர் ஒன்று இருந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் பலரும் புகார் கூறினர். இதனையடுத்து மக்களுக்கு இடையூராக இருக்கும் சுவர் அகற்றப்படும் என உறுதியளித்தார். அதன்படி இடையூராக இருந்து சுவர் அகற்றப்பட்டு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டது.
இதனிடையே பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பயணிகளின் புகார்களை அடுத்து இன்று காலையிலேயே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தார் அமைச்சர் சேகர்பாபு, அப்போது பயணிகளிடம் பேருந்து நிலையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயணிகள் சிலர் சுவர் ஒன்று இடையூறாக இருப்பதாகவும் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து பயணிகளுக்கு இடையூராக இருந்த மற்றொரு சுவரையும் இடிக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் இரண்டு சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications