பதிலுக்கு பதில் பேசினால் அது நல்லாயிருக்காது! இதோடு நிறுத்திக் கொள்கிறேன் -அமைச்சர் சேகர்பாபு
சென்னை: பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருந்தால் அது நல்லாயிருக்காது என்பதால் நாகரீகம் கருதி தாம் அதை கைவிடுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் மாற்றுக் கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து பேசிக்கொள்ளக் கூடிய சூழல் உருவாகியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் விமர்சனம் என்ற பெயரில் கடுமையான சொற்களை கையாண்டு அரசியல் உறவுகளை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
வடசென்னை பகுதியில் பல்வேறு ஆய்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், மக்கள் பயன்பெறக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கித் தள்ளமாட்டார் என்றும் நிச்சயம் இதுவரை தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு உதவுவது குறித்து நல்ல முடிவை அறிவிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

நாகரீக விமர்சனம்
தமிழக அரசியலில் நாகரீக விமர்சனங்கள் மட்டும் தொடர வேண்டும் என்றும் அதை விடுத்து விமர்சனம் என்ற பெயரில் கடுமையான சொற்களை கையாண்டால் அரசியல் உறவுகள் கெட்டுவிடும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அண்மைக்காலமாக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது தொடர்ந்து கடுமையான முறையில் விமர்சித்து வரும் சூழலில் அமைச்சர் சேகர்பாபு இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பொற்கால ஆட்சி
அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் திருப்பணிகள் அதிகம் நடந்த பொற்கால ஆட்சியாக திமுக ஆட்சி திகழும் எனவும் அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சியைக் காட்டிலும் திமுக ஆட்சியில் தான் அதிகமாக தமிழக கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

பக்குவப் பேச்சு
இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எம்.எல்.ஏ.அர்ஜூனன் பேச்சுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, பேரவை என்பதால் அடக்கி வாசிக்கிறோம் என ஆவேசம் காட்டியிருந்தார். இந்நிலையில் இன்று பக்குவப்பட்டவராக மாறி பதிலுக்கு பதில் பேசினால் நல்லாயிருக்காது எனத் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications