செந்தில் பாலாஜி கைது! அமலாக்கத்துறையின் மலைக்கவைக்கும் அதிகாரங்கள் இதுதான்! என்னென்ன தெரியுமா?லிஸ்ட்
சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்துள்ளது. நேற்று அவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனைகள் நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் அதிகாரம் என்னென்ன? என்பது பற்றி நிறையபேர் தேட தொடங்கியுள்ள நிலையில் அதுபற்றிய விபரம் வருமாறு:
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் அசோக், உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
இதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து நெஞ்சுவலி எனக்கூறி கதறிய செந்தில் பாலாஜி சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஆனாலும் அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த தகவலும் கூறவில்லை.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அதிகாரங்கள் என்னென்ன? என்பது பற்றி பலரும் தேட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு விடை அளிக்கும் வகையில் தான் இந்த செய்தி. அமலாக்கத்துறை இயக்குனரகம் அல்லது அமலாக்கத்துறை என அழைக்கப்படும் இந்தியாவில் பொருளாதர சட்டங்களை கண்காணிக்கவும், பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. இதுதான் அமலாக்கத்துறையின் முக்கிய பணியாகும்.
அமலாக்கத்துறை என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் கீழ் செயல்படும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமலாக்கத்துறையில் இந்திய காவல்பணி, ஆட்சிபணி, வருவாய்த்துறை, சுங்கம் மற்றும் கலால்துறை அதிகாரிகளை கொண்டு இயங்கி வருகிறது. 1956ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் அமலாக்கப் பிரிவு என இது துவங்கப்பட்டது. அதன்பிறகு 1957ல் அமலாக்க இயக்குனரகம் என பெயர் மாற்றப்பட்டது.
தொடக்கத்தில் பொருளாதாரம் சார்ந்த அந்நிய செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் இருப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தது. பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டத்தை மீறுவது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் காலப்போக்கில் இதற்கான அதிகார வரம்பு என்பது பல்வேறு சட்டத்திருத்தங்கள் மூலம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் அமலாக்கத்துறை என்பது அதிக சக்தி படைத்த ஒரு விசாரணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகம் என்பது டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் என்பது அமலாக்கத்துறை தலைமை இயக்குனரின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் மும்பை, கொல்கத்தா, சண்டிகர், சென்னை, பெங்களூர், அகமதாபாத், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் மண்டல இயக்குனர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. இதுதவிர துணை மண்டல அலுவலகங்கள் ஆக்ரா, ஸ்ரீநகர், கவுகாத்தி உள்பட மேலும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது.
தற்போது அமலாக்கத்துறை முக்கியமான 4 பணிகளை செய்து வருகிறது. இந்த ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக சட்டப்பிரிவுகள் உள்ளன. அதன்படி முதலாவது சட்டப்பிரிவு என்பது பிஎம்எல்ஏ அல்லது பணமோசடி தடுப்பு சட்டம் 2002 (பிஎம்எல்ஏ) (The Prevention of Money Laundering Act, 2002 (PMLA). இந்த சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பணமோசடி செய்வதை தடுப்பதையும், பணமோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் சொத்துகளை முடக்கம் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது.
2வது சட்டம் என்பது பெமா அல்லது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 (FEMA or The Foreign Exchange Management Act). இது இந்தியாவில் அந்நியச் செலாவணி குறித்த விசாரணையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்குவகிறது. இதன்மூலம் அந்திய செலவாணி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை கண்டறிய அபராதம் விதிக்கும் பணியை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
3வது சட்டம் என்பது எப்இஓஏ எனும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கான சட்டம் 2018 (FEOA or The Fugitive Economic Offenders Act). இது இந்தியாவில் பணமோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்னை செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலான அதிகாரத்தை அமலாக்கத்துறைக்கு வழங்கி உள்ளது. இதன்மூலம் குற்றம் செய்து வெளிநாடு சென்றவர்களின் சொத்துகளை இந்தியாவில் அமலாக்கத்துறையால் முடக்க முடியும்.
4வது சட்டம் என்பது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கான சட்டம், 1974 (COFEPOSA or Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act).இந்த சட்டம் என்பது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கும் ‛பெமா' சட்டத்துக்கு கூடுதலாக அதிகாரம் அளிக்கிறது. அதன்படி அந்நிய செலாவணி மோசடி தொடர்பான சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை அமலாக்கத்துறை செய்து வருகிறது.
மேலும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு சம்மன் அனுப்புவது, கைது செய்வது, சோதனை செய்வது, சொத்துகளை முடக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் சமீபத்தில் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என 250க்கும் அதிக மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறையின் அதிகாரத்தை குறைக்க மறுத்துவிட்டதோடு அந்த மனுக்களை மொத்தமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் அதிகாரத்தில் கைவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications