‘அமாவாசை’ பழனிசாமி.. “ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்”.. எடப்பாடியை சீண்டிய செந்தில் பாலாஜி!
சென்னை: 'அமைதிப்படை' படத்தில் வரும் 'அமாவாசை' கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சி இன்னும் 13 அமாவாசைகள் தான் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதை விமர்சித்து கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.
நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என்று பேசியுள்ளார். அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி பதிவு
அமைச்சர் செந்தில் பாலாஜி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்" - 'அமைதிப்படை' படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் 'அமாவாசை' கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.
பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது'' என நேற்று பேசியிருக்கிறார்.
அமாவாசை - எடப்பாடி பழனிசாமி
ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டு காலத்தில் அமாவாசையை உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
"2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்'' - 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம்.
"இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்'' - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு.
"திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன'' - 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.
நூறு பௌர்ணமிகளுக்கு ஸ்டாலின் தான்
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23- ஆம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்." எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசியது
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணகி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான். இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை. போட்டோ ஷூட் செய்வார், வெறும் விளம்பரம் மட்டுமே.
மக்கள் துன்பப்படும்போது ஓடோடி உதவி செய்வது தான் நல்ல அரசு. அது அதிமுக மட்டுமே. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்கிறார். திமுகவின் அறக்கட்டளையில் ஏராளமான நிதி உள்ளது, அதை எடுத்து மக்களுக்கு செலவு செய்யுங்கள். கார் பந்தயம் தேவையா? ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் பந்தயம் நடத்த போதுமான இடவசதி உள்ளது. மக்கள் வரிப்பணத்தை ஊதாரியாக திமுக அரசு செலவு செய்கிறது." என விமர்சித்துப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications