ஒரே பெயரில் இருக்கும் பல மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவா ஆதார் எண்? செந்தில் பாலாஜி தந்த பரபர விளக்கம்
ஆதார் மின் இணைப்பு குறித்து இணையத்தில் பரவிய தகவலுக்குச் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
சென்னை: ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் இணைக்கப்பட்டதாகப் பரவிய தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் இணைப்பு
இந்தச் சூழலில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு சில முறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில் ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால்.. அதை மாற்றி ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டுமே தர வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியதாகத் தகவல் பரவியது.

பரவிய தகவல்
இதனால் ஒரே குடியிருப்பில் இருப்போருக்கு 100 யூனிட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பாக இணையத்தில் பல விதமான தகவல்கள் பரவின.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்தச் சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார். ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 11 விழுக்காட்டிற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

பரவிய தகவல்
இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைத்தளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டுப் பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது ஆகும்.

கால அவகாசம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 09.09.2022 அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில்/குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்கக் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம்
எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்குப் பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட, கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications