சூப்பர்.. சென்னை மக்களுக்கு 'பவர்' நியூஸ் சொன்ன 'ஷாக்' அமைச்சர்.. சீக்கிரமாக மாற்றம் வருகிறதாமே
சென்னை: சென்னை முழுவதும் மேலே செல்லும் மின்சார கம்பிகள் அனைத்தும் விரைவில் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் தேர் மற்றும் சப்பரம் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தேர் செல்லும் முக்கிய வீதிகளில் உள்ள மின் கம்பிகள் பூமிக்கடியில் புதைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி இப்பணிகள் முதற்கட்டமாக சென்னையில் தொடங்கியது.
அதாவது சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மேலே செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் புதைவட கம்பிகளாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக 2022ம் ஆண்டில் பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அடையாறு மற்றும் தகவல் தொழில்நுட்ப சாலை ஆகிய 5 இடங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டன. அதேபோல 2023ம் ஆண்டில் 7 கோட்டங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் பின்னரே மற்ற மாநகராட்சிகளில் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கேள்வி
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எஸ்.ராஜ்குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கேள்வியெழுப்பியிருந்தனர். அதாவது, "மயிலாடுதுறை நகர்ப் பகுதியில் உள்ள மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற வேண்டும். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் செல்வதால் தேர் மின் கம்பியில் உரசும் அபாயம் இருக்கிறது. எனவே மேலே செல்லும் கம்பிகள் பூமிக்கு அடியில் புதைத்து புதைவட கம்பிகளாக மாற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

அமைச்சர் விளக்கம்
இதற்கு விளக்கமளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னையில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி பெரம்பூர் மற்றும் ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால், தாம்பரம் அடையார் கோட்டங்களில் பணிகள் இன்னமும் நீடித்து வருகின்றன. இது தவிர மேலும் 7 கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்எல்ஏக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மயிலாடுதுறை நகரப் பகுதியில் பணிகள் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

சென்னையில்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் பணிகள் முடிந்த பின்னர்தான் இதர பகுதிகளில் பணிகள் தொடங்கப்படும். ஆனால் 4 இடங்களில் அவசர தேவையாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல அனைத்து தேரோடும் வீதிகளிலும் இப்பணிகளை அவசரகதியில் மேற்கொள்ளப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பியில் தேர் உரசியது.

விபத்து
இதில் சம்பவ இடத்திலேயே சுமார் 11 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கன்புதூர் கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர் முழுவதும் சப்பரத்தில் விநாயகர் வலம் வந்த நிலையில், திடீரென சப்பரத்தின் மேல் பகுதி மேலே சென்ற உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது உரசியது. இதனால் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications