செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இல்லை.. கொழுப்புக்கட்டிகள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாகவும் அவருக்கு பித்தப்பையில் கல் இல்லை கொழுப்புக்கட்டிகள்தான் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, உடல்நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த புதன் கிழமை, மதிய உணவு உட்கொண்டது முதலே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவரது கால் மரத்து போவதாக கூறிய நிலையில் இதயவியல் துறை பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கலாம் எனக்கருதி எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையாமல் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் அதை குறைக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். பித்தப்பையில் முதலில் கல் இருப்பதாக சொன்னார்கள்.
அதற்காக சிடிஸ்கேன் எடுத்து பார்த்ததில் கல் எதுவும் இல்லை. சிறு சிறு கொழுப்புக்கட்டிகள் இருப்பதுதான் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் எந்த பாதிப்பும் இல்லை. சோர்வு நிலையில் இருப்பதால் அவருக்கு என்ன உடல் பாதிப்பு இருப்பதை கண்டறிய இன்றும் கூட பரிசோதனைகள் மேற்கொள்கிறார்கள். பரிசோதனையின் முடிவில் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என்று மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications