உதயநிதிக்கு புதிய அடைமொழி “சின்னவர்” - வணங்குகிறேன் என ரைமிங்காக புகழ்ந்த செந்தில் பாலாஜி
சென்னை: உதயநிதி ஸ்டாலின் கலைஞரும் - தலைவரும் கலந்தெடுத்த வார்ப்பு, அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், முந்தை கூட்டங்களை விட தற்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏக்களும் புகழ்ந்து பேசுவது அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவையில் உதயநிதி ஸ்டாலினை ரைமிங் வசனம் பேசி கவிதைபோல் வாசித்து வாழ்த்தியுள்ளார்.

சின்னவரே!
அவர் பேசியதாவது "பூவை போன்ற எழில் முகம். எப்போதும் நெஞ்சத்து பசுமை காட்டும் பொழில் முகம். தேனினும் இனிய குணம். வானினும் பெரிய மனம். பொல்லாத மனிதர்கள் வீசிடும் விமர்சன முட்கள் கூட பொன்னான உங்கள் முகத்தினால் புட்களாய் மாறி கம்பளம் விரிக்கும். வில்லேந்தி ஆயிரம் பேர் களத்தில் நின்றாலும், இனிமையான சொல்லேந்தி வென்று வரும் எங்கள் சின்னவரே! உள்ளங்களை வெல்வதையே கொள்கையாக கொண்டவரே!

உதயநிதி அவர்களை வணங்குகிறேன்
நீங்கள் கலைஞரும் தலைவரும் கலந்தெடுத்த வார்பு. அதனால்தான் தமிழகம் முழுவதும் உங்களின் மேல் ஈர்ப்பு. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை... திருவல்லிக்கேணியின் தங்கப்பிள்ளை... மாண்புமிகு அண்ணன் உதயநிதி அவர்களை வணங்குகிறேன்." எனக் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பேச்சு அவையில் இருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதேபோல் நேற்று அமைச்சர் பி.மூர்த்தியும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பேசியுள்ளார்.

கெத்து! தமிழ்நாட்டின் சொத்து
அவர் தனது உரையில் "அன்புக்கு இலக்கணமாம் ஆருயிர் உதயநிதி அவர்களே... நீங்கள் நடித்ததோ `ஒரு கல், ஒரு கண்ணாடி'. ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது?நீங்கள் நடித்ததோ `கெத்து'... நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து. எதிரிகளை தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் அன்பன் நீங்கள்! உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன். நிஜத்தில் நீங்கள்தான் `மாமனிதன்'. நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டில் இளைஞர்கள் நிமிர்ந்தார்கள். `இப்படை வெல்லும்' என்றீர்கள். இப்படைதான் எப்போதும் வெல்லும் என்பதை நித்தமும் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உதயநிதி இருக்க பயமேன்!
பொதுவாக எப்போதும் உங்கள் மனசுதான் தங்கம். தங்கம்தான்! `சரவணன் இருக்க பயமேன்' என்பது நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்பது தமிழகத்து இளைஞர்களின் எண்ணம். `நெஞ்சுக்கு நீதியின்' பாத்திரம் ஏற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள். நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகமாகவே வாழ்கிறீர்கள். `மாமன்னன்' படம் அல்ல. தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள்தான். எங்களின் இதயம் கவர்ந்த உதயமும் நிதியுமாமான இளைஞரணி செயலாளாரே! உங்களை வணங்குகிறேன்." என புகழ்மழை பொழிந்தார்.












Click it and Unblock the Notifications