அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை? காவேரி மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்னும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவேரி மருத்துவமனை வெளியிடவில்லை.
இதனால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை நடைபெறுவதற்கான சாத்தியக் கூறு குறைவாகவே தெரிகிறது. அதேபோல் செந்தில்பாலாஜி குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டும் அவ்வப்போது வெளியாவதில்லை.

என்ன தான் இருந்தாலும் செந்தில்பாலாஜி ஒரு அமைச்சர், ஆகையால் அவரது உடல் நலம் குறித்த அறிக்கையை தினமும் வெளியிட வேண்டிய பொறுப்பு காவேரி மருத்துவமனைக்கு உள்ளது. என்ன மருத்துவம் அளிக்கப்படுகிறது எனத் தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக் கைதியாக இருப்பதால், அவரை பார்ப்பதற்கு காவேரி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. புழல் சிறை போலீஸார் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கின்றனர்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என்ன பரபரப்பு நிலவியதோ அதே பரபரப்பு தான் இப்போதும் நீடிக்கிறது. கரூர் மற்றும் கோவையிலிருந்து செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஆர்வக்கோளாறில் காவேரி மருத்துவமனைக்கு படையெடுத்து வந்தாலும் அவர்கள் அனைவரும் அதிகபட்சம் லிப்ட் வாசலிலோ, ரிசப்ஷனிலோ தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.
அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேக மருத்துவக் குழு மட்டும் பணியாற்றி வருகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், வாய்ப்பு இருப்பதாக தான் அவர் கூறுகிறாரே தவிர உறுதியாக நாளை அறுவைச் சிகிச்சை என அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே அமலாக்கத்துறையும் எத்தனை நாட்களுக்கு நெஞ்சு வலி இருக்கிறது என பார்ப்போம் என்று செந்தில்பாலாஜியை விட்டுப் பிடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications