20,000 புத்தகங்கள் வாசித்த அதிமேதாவி ஆர்வ கோளாறுகளே .. கேலி, கிண்டல் செய்த செந்தில் பாலாஜி
சென்னை: பிஜிஆர் நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு, அதை டெண்டர் எடுத்தது அதிமுக. இது 20 ஆயிரம் புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலாக விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில் நமது நாடு எப்போதுமே பெண்களுக்குச் சம உரிமையை அளிக்கும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. நமது இந்தியப் பெண்கள் பல சமயங்களில் உலக மகளிருக்கு முன்னுதாரணமாக இருந்து உள்ளனர்.

இந்தியாவின் கலாச்சாரம்
இந்தியாவின் கலாசாரம் தான் ஒட்டுமொத்த உலகிற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் வாழ்வதற்குக் கற்பித்த நூல் தான் திருக்குறள். நமது இளைய சமூகத்தினர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். இது நாள் வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்து இருப்பேன்.

12 ஆயிரம் புத்தகங்கள்
அதேபோல சுமார் 12 ஆயிரம் புத்தகங்களைப் பராமரித்து வருகிறேன். எனது அலுவலகம், எனது வீடு என எந்த இடத்திற்குச் சென்றாலும் கூட குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன். உலகம் தொடங்கி உள்ளூர் வரை அனைத்து தலைப்புகளில் இருக்கும் புத்தகங்களையும் நாம் வாசிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ரூ 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ 4,472 கோடி மதிப்பில் மறுபடியும் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் கெடு
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை சொன்னார் என்பதை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்காவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கெடு வைத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்
இவ்வாறு செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டு வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை என கிண்டலாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications