ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றிச்செல்வதை தடுக்க போலீசுக்கு அமைச்சர் உத்தரவு?
சென்னை: ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றிச்செல்வதை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுவது சரியாக இருக்காது என்பது அரசின் வாதமாக இருக்கிறது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்று அரசு விதித்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்றும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக் கழக பஸ்கள் முறையாக இயக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து முழுமையாக புறப்பாடு செய்வது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை நடந்தது. அப்போது சென்னை கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே அமைச்சர் சிவசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஏனெனில், அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக இயக்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பதுதான் எங்களது அன்பான வேண்டுகோள். இம்மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே டிரைவர்கள் நியணம் குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவருடன் கண்டக்டர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,666 பஸ்களை புதிதாக வாங்க அரசாணை வெளியிடப்பட்டு, முதல்கட்டமாக 100 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 2 ஆயிரத்து 213 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது என்றும் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியம் குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்தையில் 'பே-மேட்ரிக்ஸ்' முறையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஓய்வுபெற்றவர்களுக்கான பணப்பலன்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications