டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன்?- எஸ்பி வேலுமணி பரபரப்பு விளக்கம்
சென்னை: டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என எஸ்பி வேலுமணி பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சந்தித்தன. கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா எந்த கூட்டணியும் இல்லாமல் 37 இடங்களில் தனித்தே வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும் ஒற்றை தலைமை என்பது அதிமுகவுக்கு வேண்டும் என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குரல் கொடுத்தார். இவரது குரலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
போஸ்டர்
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சலசலப்பு
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கடந்த 10-ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினர். இதனால் இவர்களது சந்திப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ்- ஈபிஎஸ்
இந்த நிலையில் மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் வேலுமணி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு
எதிர்க்கட்சிகள் ஏதாவது நடக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். தமிழகத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் வேலுமணி.