சென்னை மாநகராட்சியில் நிதி இழப்பு இல்லை... ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எம்-சாண்ட் பயன்படுத்தியன் மூலம் சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன் தினம் அறிக்கை விட்டுள்ள நிலையில் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தப் புள்ளிகள் ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி முறையாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எஸ்.பி.வேலுமணி பதில்
சென்னை மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ஸ்டாலின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்து விளக்கம் அளித்துள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சட்டப்படி
சென்னை மாநகராட்சியில் ஒளிவுமறைவற்ற முறையில் ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் படி நடைபெறுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறையிடம் விலைப்பட்டியல் பெற்று, சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை மூலம் சேர்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எம்-சாண்ட்
ஆற்றுமணலைக் கொண்டு செய்யப்படும் பணியின் செலவு குறைவு என்றும், எம்-சாண்டைக் கொண்டு செய்யப்படும் பணியின் செலவு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் புகார்
சென்னை மாநகராட்சி கட்டுமானப் பணிகளுக்கு மணல் பயன்படுத்தும் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என திட்டவட்டாமக கூறியுள்ளார் அமைச்சட் வேலுமணி. இதனிடையே சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல் பற்றி ஊழல் ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.