3 நாள் பயணமாக சிலி குடியரசு நாட்டிற்கு பறந்த அமைச்சர் தாமோ அன்பரசன்! எதற்காக இந்த விசிட்?
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மூன்று நாள் பயணமாக தென் அமெரிக்காவில் உள்ள சிலி குடியரசு நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.
முதல் நாளான நேற்று சிலி குடியரசு நாட்டின் அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் சான்ட்டியாகோ நகரில் நடைபற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சிலி குடியரசு நாட்டின் அமைச்சர் கார்லோஸ் மான்டெஸ் சிஸ்டர்னாஸ் (Mr. Carlos Montes Cisternas, Minister for Housing and Urban Planning ) பேசுகையில், சிலியை பொறுத்தவரை இந்தியாவை போலவே வளர்ந்து வரும் நாடு என்றார்.

தங்கள் நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக பின்பற்றப்படும் வீட்டு வசதி கொள்கைகள், குடிசைகளை மேம்படுத்தும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள், வறுமைக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றோம் என எடுத்துக் கூறினார்.
இதனிடையே அமைச்சர் தாமோ அன்பரசன் பேசுகையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 லட்சம் குடியிருப்புகள் /தனி வீடுகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளதாக சிலி அமைச்சரிடம் தெரிவித்தார்.
குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாடு வாரியம் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்தார் எனவும் கூறினார்.

குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்தார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு குடியிருப்புக்கு ரூ.1.5 இலட்சம் மானியமாகவும், தமிழ்நாடு அரசு ரூ. 7.50 லட்சத்திலிருந்து ரூ.13 இலட்சம் வரை மானியமாக வழங்குவதாகவும் மீதமுள்ள தொகை பயனாளிகளால் ஏற்கப்படுவதாக தெரிவித்தார். இந்த திட்டம் குறித்து சிலி குடியரசு நாட்டின் உயர் அலுவலர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications