தங்கமான அறிவிப்பு..கடன் உதவி திட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை! குஷியான இளைஞர்கள்
சென்னை: கடன் தேவைப்படுவோருக்கு கடன் விரைந்து கிடைக்க மாவட்டந்தோறும் வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை முகமை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமையும்போது பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில்தான் முதன் முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. சொத்துரிமையில் சமபங்கு, உள்ளாட்சி அமைப்புகளில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு போன்றவற்றையும் கருணாநிதி உறுதி செய்தார். அதேபோல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கான இலவச பேருந்து, மகளிருக்கான உரிமை தொகை ஆகிய திட்டங்களை தொடங்கியுள்ளார்.

இது தவிர மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களுக்கும் தமிழ்நாடு அரசு கடன் உதவியையும் வழங்கி வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேசியிருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வங்கியாளா்கள் கூட்டுக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய அவர், "கடன் தேவைப்படுவோருக்கு அது விரைந்து கிடைக்க வேண்டும். இதற்காக, மாவட்டந்தோறும் வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை முகமை ஏற்படுத்தப்படும்" என கூறியுள்ளார். அதாவது, "பள்ளி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம், மகளிருக்கான உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கான உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது.
கைத்தறி நெசவாளர்களுக்கான முத்ரா கடனுதவித் திட்டத்தை பொறுத்த அளவில் இதை அமல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் கடனை பொறுத்த அளவில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடன் கோரி வரும் விண்ணப்பங்கள் மீது 10 நாட்களில் தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மறுபுறம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கூடுதல் கடனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி கடனை பொறுத்த அளவில் குறைந்த அளவுதான் வழங்கப்படுகிறது. இருப்பினும் இது தகுதியான மாணவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். ஏராளமான தகுதியான மாணவர்கள் கல்வி கடன் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த கடன் நிச்சயம் பலனளிக்கும். இவையெல்லாவற்றையும் விட கடன் வசதிகள் தேவைப்படுவோருக்கு அவை விரைந்து கிடைக்க வேண்டும். இதற்காக, மாவட்டந்தோறும் வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை முகமை ஏற்படுத்தப்படும்.
இந்த முகமைக்கு அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் தலைவராக இருப்பார். வங்கிகளுக்கும், அரசுத் துறைகளுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அமைப்பாக வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை முகமை செயல்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications