"இன்னிக்கு காலைல அழுதுட்டேன்.. யாம் அன்னையும் இலமே” : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்!
சென்னை : தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அம்மா குறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்னையரை மகிழ்வித்து, இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி அம்மாள், கடந்த 2020ல் காலமானார். அவரது நினைவாக இன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

அன்னையர் தினம்
பாலூட்டி, சீராட்டி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்க்கும் அன்னையின் சிறப்புகளை, நினைவுகூர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிறன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. காலை முதல் இரவு வரை பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் அன்னையருக்கு மரியாதை செய்யும் நாள் இன்று. இந்த நாளில் அன்னையரை மகிழ்ச்சிப்படுத்துவது பிள்ளைகளின் வழக்கம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி தமிழகத்தின் தொழில்துறை ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது அம்மா குறித்த நினைவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது நெகிழ்ச்சிகரமான இந்தப் பதிவு வாசிப்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அமைப்பில் பெரும்பங்கு செயலாற்றியவர்.

நெகிழ்ச்சி பதிவு
தனது அம்மா குறித்து தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ள பதிவில், "அம்மாவுக்குச் சில பிடிவாதங்கள் இறுதி வரை
இருந்தன. காலையில் காஃபியை அம்மா தன் கையால் போட்டு, தானே அதை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு மாடிப்படியாக பைய ஏறி வந்து காஃபி டம்ளரை என் கையில் அவர்கள் தான் கொடுக்கவேண்டும்.
இதில் யாராவது குறுக்கிட்டுவிட்டால் சட்டென்று கோபம் வரும். வயதின் காரணமாக, இதைத் தளர்த்திக் கொண்டு விடுங்களேன் என நான் பலமுறை மன்றாடிய போதெல்லாம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது தான் அம்மாவின் ரியாக்ஷன் ஆக இருந்தது.

பாச விளையாட்டு
இதைத் தவிர்க்க நான் சற்று முன்கூட்டியே எழுந்து கீழே வந்து உட்கார ஆரம்பித்தேன். அவர்களோ நான் எழுமுன் காஃபி டம்ளரோடு படியேறி வர ஆரம்பித்தார்.
இந்த விளையாட்டு அம்மா உடல் நலம் குன்றி ஊரிலிருந்து சென்னைக்குச் செல்லும் வரை அனுதினமும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தது.
என் காலைகள் எப்போதும் அவர்களுடனானதாக கிராமத்தில் விடிந்து கொண்டிருந்த காலம் அது.

கண்ணீர்
இன்று காலை காஃபி அருந்திக்கொண்டிருக்கும் அம்மாவின் புகைப்படம் ஒன்றைத் தற்செயலாகப் பார்த்தபோது கண்களில் நீர் கோர்த்ததை தடுக்க முடியவில்லை. யாம் அன்னையும் இலமே." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அன்னையர் தின பாசப் பதிவு அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications