யார் அனுமதி கொடுத்தது? “எல்லா தப்பையும் பண்ணது நீங்கதான்”.. எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
சென்னை : எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதுதான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டது. எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, திமுக மீது சேற்றை வாரி வீசுவதை அதிமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நானும் டெல்டாகாரன் தான் என்றும் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும் இதை தொழில் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதே டெல்டா காரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். திமுக அரசு முன் கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் தவற விட்டுவிட்டது. நிலக்கரி எடுப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு, திமுக அரசு தான் முழுக்க முழுக்க காரணம் என்று கூறினார்.
இந்நிலையில், சற்று முன்பு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அதிமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டது என விமர்சித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவில்லை. மக்களை பாதிக்கும் திட்டங்களை திமுக அரசு ஒருபோதும் நிறைவேற்றாது. ஒப்பந்தத்தின்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் ஏற்க முடியாது எனக் கூறப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2011ல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அடிப்படை காரணம் VAT வருமானம் உயரும் என்றே, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் போடப்பட்டிருந்தது. மீத்தேன் திட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படவே இல்லை. லைசென்ஸ் காலம் முடிந்தபிறகு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ததாக அதிமுக அரசு அரசாணை வெளியிட்டது.
மீத்தேன் திட்டத்திற்கு பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்திற்கும் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதுதான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி ஏகடியம் செய்வது எந்தவகையில் நியாயம்?
எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, திமுக மீது சேற்றை வாரி வீசுவதை அதிமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதல்வரை தமிழ் உணர்வு கொண்டவர்கள், விவசாயிகள் மீது அக்கறை கொண்டவர்கள் பாராட்டியுள்ளனர். முதலமைச்சருக்கு கிடைத்த பெருமையை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications