லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்
சென்னை: லாரி மோதியதாலேயே மின் கம்பம் விழுந்தது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது (42). அந்த பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அவர் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு மீதமிருந்த உணவை அங்கிருந்த தெருநாய்களுக்கு வைக்க வெளியே சென்றார்.

தனியார் மருத்துவமனை
அப்போது தெருவில் சேதமடைந்திருந்த மின்கம்பம் திடீரென முறிந்து சேதுவின் மீது விழுந்தது. இதில் மின்வயர்கள் அறுந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அப்பகுதியினர் சேதுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உறவினர்கள்
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்யாததால்தான் இது போன்று ஒரு உயிர் பலி ஏற்பட்டுள்ளது என புகார் கூறினர். இந்த நிலையில் அவரது சடலத்தை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மின்கம்பம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதால் இதுகுறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சேதமடைந்த மின்கம்பம் விழுந்ததால் சேது உயிரிழக்கவில்லை.

சேதம்
அவ்வழியாக வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியது. அப்போது அந்த பக்கம் வந்த சேது மீது மின்கம்பம் சாய்ந்தது. இதனாலேயே உயிரிழந்தார். எந்த இடத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்திருக்கவில்லை. தரமற்ற மின்கம்பங்கள் என்பதே கிடையாது. மின்கம்பம் மீது மோதிய லாரியை கண்டறிய சிசிடிவி காட்சிகளுடன் விசாரணை நடக்கிறது என்றார் தங்கமணி.












Click it and Unblock the Notifications