போராட்டம் எதிரொலி... பணிந்தது அதிமுக அரசு... தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நிறுத்தம்
சென்னை: தமிழகத்தில் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி நிறுத்திவைக்கப்படும் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்புகளும், தலைவர்களும் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கை காரணமாகவும், சென்னை உட்பட பல இடங்களில் நடைபெறும் போராட்டம் எதிரொலியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் என்.பி.ஆரில் புதிதாக சேர்த்துள்ள 3 அம்சங்கள் பற்றி விளக்கம் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் கிடைக்காததால் என்.பி.ஆரை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அங்கம் வகித்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் இந்த என்.பி.ஆர். கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
சிறுபான்மையின மக்களின் ஐயங்களை நீக்கும் பொருட்டு என்.பி.ஆர் விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அதிமுக என்றும் அரணாக இருக்கும் எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இஸ்லாமியர்களை திமுக தான் தூண்டிவிட்டு போாராட்டம் நடத்தக் கூறுவதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் அப்போது எல்லோருக்கும் புரியும் எனவும் கூறினார். என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் கூட எந்த ஆவணங்களையும் யாரும் காட்டத்தேவையில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் திமுக இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் உதயகுமார் குற்றஞ்சாட்டினார். மேலும், என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே இன்று மாலை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. முதல்வரை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்து பேசி குறைந்தபட்சம் என்.பி.ஆர். விவகாரத்திலாவது நல்ல முடிவெடுங்கள் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.