சென்டிமென்ட்! ஆழ்வார்பேட்டை டூ கிரீன்வேஸ் சாலை! "குறிஞ்சி"யில் மே மாதம் குடியேறும் அமைச்சர் உதயநிதி
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தந்தையுடன் வசித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேற போகிறார். அதற்காக பங்களாவை தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்த முதல்வர் ஸ்டாலின் பின்னாளில் ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
அவ்வப்போது தனது தாய் தயாளு அம்மாளை பார்க்கவோ இல்லாவிட்டால் அவருடைய பிறந்தநாள், நினைவுநாளுக்கு அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்வதுண்டு.

தயாளு அம்மாள்
இங்கு தயாளு அம்மாளுடன் மகள் செல்வியும் அவருடைய குடும்பத்தினரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முதல்வராக உள்ள ஸ்டாலின் அரசு பங்களாவில் குடியேறாமல் தனது சொந்த வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கூட அவர் அரசு பங்களாவை பயன்படுத்தவில்லை. ஆழ்வார்பேட்டை வீடு முதல்வரின் முகாம் அலுவலகமாகவே மாறிவிட்டது. இங்கு அவரை பார்க்க அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

சித்தரஞ்சன் சாலை
இதனால் இந்த சித்தரஞ்சன் சாலையே பரபரப்பாக காணப்படும். முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, தனது மனைவி கிருத்திகா, மகளுடன் சித்தரஞ்சன் சாலையில் தந்தையுடன் வசித்து வருகிறார். மகன் இன்பநிதி வெளிநாட்டில் இருக்கிறார். தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி இருந்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
இதனால் முதல்வரான தந்தையையும் அமைச்சரான மகனையும் பார்க்க கூட்டம் கூடுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் எப்போதுமே தம்மால் பொது மக்களுக்கு இடையூறே இருக்கக் கூடாது என கருதுவார். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சித்தரஞ்சன் சாலையிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வழக்கமான ஒரு சாலை வழியாக ஸ்டாலின் செல்வாராம்.

நடைபாதை வியாபாரிகள்
அந்த சாலையில் நிறைய நடைபாதை வியாபாரிகள் இருக்கிறார்களாம். முதல்வரானதும் பாதுகாப்பு கருதி அந்த வியாபாரிகளை பாதுகாப்பு வீரர்கள் அப்புறப்படுத்தக் கூடும் என்பதை கருதிய முதல்வர் அந்த வழியாக செல்வதையே தவிர்த்துவிட்டாராம். இதனால் அமைச்சர் உதயநிதிக்கு அரசு பங்களா ஒதுக்க முடிவு செய்தார்.

கிரீன்வேஸ் சாலை
கிரீன்வேஸ் சாலையில் குறிஞ்சி பங்களாவில் வசித்து வந்த சபாநாயகர் அப்பாவு அருகே உள்ள மலரகம் பங்களாவுக்கு கடந்த ஜனவரி மாதமே மாற்றலாகிவிட்டாராம். இதனால் காலியாக உள்ள குறிஞ்சி பங்களாவில் அமைச்சர் உதயநிதி குடியேறவுள்ளார். அவருக்காக அங்கு தோட்டக் கலை சார்பில் தோட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அடுத்த மாதம் குடியேறும் உதயநிதி
இங்கு தனது குடும்பத்தினருடன் அடுத்த மாதம் உதயநிதி குடியேற போகிறார். இதற்காக வண்ணம் பூசும் பணிகள், வீட்டை அலங்கரிக்கும் பணிகள், சுத்தப்படுத்தும் பணிகள் என எல்லாமே ஜரூராக நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் இந்த குறிஞ்சி பங்களாவில்தான் அப்போது குடியிருந்தார். தற்போது உதயநிதியும் அந்த பங்களாவுக்கே வருகிறார். இதனால் திமுகவினர் சென்டிமென்ட்டாக இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications