திமுகவுக்கு சீமான் சப்போர்ட்? “அண்ணன் எப்போதும் உணர்ச்சிவசப்படுவார்”.. உதயநிதி கொடுத்த ரிப்ளை!
சென்னை: பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை திமுக எதிர்த்து களமிறங்கினால், திமுகவுக்காக நான் வாபஸ் பெறுவேன் என சீமான் தெரிவித்த நிலையில், அதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும்." எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம். திமுகவை வீழ்த்துவதற்கு எனக்கு அண்ணாமலை எதற்கு? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. நாம் தமிழர் என்பதே சாதி ஒழிப்பு தான் என்றும் சீமான் பேசியுள்ளார்.
தொடர்ச்சியாக திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த சீமான், திடீரென திமுகவை ஆதரிப்பேன் என்றும், திமுக அதிமுகவுடன் மோதுவது பங்காளிச் சண்டைதான், திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல என்று பேசியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப்பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், "சீமான் அண்ணன் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார். திராவிட கட்சிகள் எங்கள் பங்காளிகள் எனப் பேசியது குறித்து நான் பார்க்கவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக சொல்வது நிச்சயமில்லாதது. தேர்தல் அறிவிக்கட்டும், அப்போது தைரியமிருந்தால் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடட்டும். அதன் பிறகு அதுபற்றி பேசலாம். இப்போது யூகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications