சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான்.. இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.. உதயநிதி ஸ்டாலின் கட் & ரைட்!
சென்னை: சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. பாஜகவினர் நான் பேசியதை திரித்து கூறுகின்றனர். 'இந்தியா' கூட்டணி வலுப்பெறுவதை திசைதிருப்பவே இதை கையில் எடுத்துள்ளனர் என - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

உதயநிதி பரபர பேச்சு: கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
பாஜக புகார்: சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாகின் பேசியது டெல்லி வரை எதிரொலித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாள்வியா, சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை என்றும் பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
உதயநிதி விளக்கம்: இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்படித்தான் பேசுவேன்: அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்கிறார். அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப்போகிறார்களா?

திசைதிருப்ப முயற்சி: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிடக் கொள்கை. முன்பு பெண்கள் படிக்கக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மேலாடை அணியக்கூடாது. கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்றார்கள். இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியதுதான் திராவிடமாடல். என்ன வழக்குப் போட்டாலும் சந்திப்போம்.
நாம் நம் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, யோசித்து திட்டங்களைக் கொண்டு வருகிறோம். ஆனால், பாசிஸ்ட்கள் நம் குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்வதற்கு என்ன வழி என யோசித்து அதற்கான திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
வேண்டுமென்றே போலிச் செய்தி: இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்தது அவர்களை ரொம்ப தடுமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்தியா கூட்டணி வலுப்பெற்றுள்ளதை திசைதிருப்பவே பாஜகவினர் வேண்டுமென்றே போலிச் செய்தி பரப்புகின்றனர். வதந்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனக்கு மதம் ஜாதி போன்றவற்றில் நம்பிக்கை இல்லை, எனக்கு எல்லா மதமும் ஒன்றுஹான். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம். சனாதானம் குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள். சாதிய மத பாகுபாடு நீங்கவேண்டும் என நான் பேசியது குறித்து அதிமுகவினரிடம் கருத்து கேளுங்கள்." எனத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், "நீங்கள் சனாதனம் பற்றி பேசியதை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், "யாரு.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க.." என பட்டென கூறினார்.












Click it and Unblock the Notifications