மூத்த உடன்பிறப்புகளின் முத்த மழை! பழம்பெரும் தொண்டர்களின் பாசத்தில் திளைத்த உதயநிதி
சென்னை: 'கழகம்தான் குடும்பம்; குடும்பம்தான் கழகம்' என ஒவ்வொரு திமுக தொண்டருக்கும் கற்றுத்தந்தவர் மு.கருணாநிதி. 1969இல் அண்ணா மறைந்த பிறகு அக்கட்சியின் முகமாக மாறிய கருணாநிதிக்கு, அப்போது வயது 45.

அண்ணாவுக்குப் பின் ஏறக்குறைய 2018 வரை இவரை நம்பித்தான் திமுக இயக்கம் வேகநடை போட்டது. ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காலகட்டத்தில் கூட திமுகவைச் சிதறாமல் கட்டிக் காப்பாற்றியவர் அவர் என எதிர்க்கட்சியினர்கூட இவருக்குச் சாதனை சான்றிதழ் தருகிறார்கள்.

மு.கருணாநிதியின் ஆரம்பகால மேடைப் பேச்சைத் தனது 10 வயதில் கேட்ட எண்பது வயது தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக திமுக இருக்கிறது.

இந்தத் தள்ளாத வயதிலும் திமுகவின் கரை வேட்டியோடுதான் இவர்கள் இந்தத் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் வலம் வருகிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். இந்தியாவில் உள்ள முன்னோடி கட்சிகளில் திமுகவும் ஒன்று என்பதை இன்றைய இளைஞர் உலகம் அறியாத செய்தி.

அந்த வரலாற்றுச் சுவடுகளை நினைவுபடுத்தும் விதமாகவும், 'கலைஞர் 100' நிகழ்வை ஒட்டியும் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவின் மூத்த முன்னோடி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் 'உடன்பிறப்பே' நிகழ்ச்சியை நடத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதில் முன்னோடி தொண்டர்களுக்குப் பொற்கிழி வழங்கினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல தொண்டர்கள் உடலால் தளர்ந்து போய்விட்டார்கள். ஆனால், உள்ளத்தில் அதே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை அவர்களின் பேச்சின் மூலம் நம்மால் அறிய முடிந்தது. சில தொண்டர்கள் கையில் தடியுடன் வந்து கலந்துகொண்டதைப் பார்த்து உதயநிதியே உணர்ச்சிவசப்பட்டார்.

ஒரு பெரியவர், "1952இல் இருந்து கட்சியில் இருக்கிறேன். அன்று முதல் திமுக கரை வேட்டியைத்தான் கட்டி வருகிறேன். நான் என் வயதில் பெரியார் பேசிய 5 பொதுக்கூட்டங்களைக் கேட்டு இருக்கிறேன். அதிலிருந்து இன்றுவரை நான் திமுகவில்தான் இருக்கிறேன்" என்கிறார். அவர் பேச்சில் சின்ன தள்ளாட்டம். ஆனால் நினைவில் எந்த ஆட்டமும் இல்லாமல் அப்படி ஓர் உறுதியை உணர முடிகிறது.

"இப்போது எனக்கு 76 வயது ஆகிறது. 20 வயதிலிருந்து நான் டி.எம்.கே.காரன்" என்கிறார் மீசையைத் தடவியபடி.

இன்னொரு மூத்த முன்னோடி தொண்டர் கணீர் குரலில் பேசத் தொடங்குகிறார். "அப்ப ஆட்சிக் கவிழ்ந்துவிட்டது. அப்போது தஞ்சாவூரில் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதற்கு லாரியில் 5 ரூபாய் கொடுத்துப் போன நினைவு அப்படியே பசுமையா இருக்கிறது" என்கிறார்.

இவரது பக்கத்திலேயே அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் நடக்க முடியாமல் நடந்துவந்து, "25 வருஷம் தொடர்ந்து ஒன்றிய பிரதிநிதியாக இந்தக் கட்சியிலிருந்திருக்கிறேன், ஊரில் பல கூட்டங்கள் போட்டிருக்கிறேன். முடிகின்றவரைக்கும் ஆள் சேர்ப்பதற்காக ஊர் ஊராக அலைந்திருக்கிறேன்" என்கிறார்.

இவரைப்போலவே இன்னொரு முன்னோடி 'உடன்பிறப்பு' என்ன சொல்கிறார்? அத்தனை எளிதில் விளங்கவில்லை. அந்த அளவுக்குக் குரலில் நடுக்கம். ஆனால், அவர் தட்டுத் தடுமாறிச் சொல்லவந்ததை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முயன்றோம்.

அவர் கல்லக்குடியில் மு.கருணாநிதியின் தலைமையில் நடந்த 'டால்மியா போராட்டத்தில்' கலந்து கொண்டிருக்கிறேன் என்பதைத்தான் புரியாத குரலில் சொல்ல வருகிறார் என அறிந்தோம்.

"நான் 10 வயதிலிருந்து திமுகவில்தான் இருக்கிறேன். இப்போது வயது 80 ஆகிறது. முன்பு போல வேகமாகக் கட்சிக்கு வேலை செய்ய முடியவில்லை. அது வருத்தம்தான்" என்கிறார் மூச்சு இரைத்தபடி பழம்பெரும் உடன்பிறப்பு ஒருவர்.
"1973 ல் அண்ணா மேம்பாலம் திறப்பு விழாவில் தலைவர் பக்கத்திலேயேதான் இருந்தேன். அப்போது என்னால் போட்டா எடுக்க முடியவில்லை. அன்றைக்கு செல்போன் எல்லாம் வரவில்லை.
போட்டோ எடுக்க வேண்டும் என்றால் ஸ்டுடியோவுக்குப் போய்தான் எடுக்க வேண்டும். அன்றைக்குத் தலைவருடன் போட்டோ எடுக்காதது இப்போது ஒரு குறையாகவேதான் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது" என்கிறார் சென்னை வாழ் கழக கண்மணி ஒருவர்.
இந்த நிகழ்ச்சியில் ஆண் தொண்டர்கள் அளவுக்குச் சற்றும் குறையாமல் பெண் தொண்டர்களும் கலந்துகொண்டனர். அத்தனை பேருக்கும் அமைச்சர் உதயநிதி, மேடையை விட்டு இறங்கிச் சென்று தனது கையால் பொற்கிழி வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட ஒரு பெரியவர், "எனக்கு இப்போது மருத்துவச் செலவுகள் உள்ளது. கட்சிக்கு எந்தப் பலனும் பார்க்காமல் உழைத்தேன். ஆனால், அதற்கான பலன் இப்போது தம்பி உதயநிதியால் கிடைத்திருக்கிறது" என்றார் குரல் உடைய.
பல மூத்த தொண்டர்களுக்கு உதயநிதி சால்வை போட்டார். அதைப் பலர் அவருக்கே போட்டு அழகு பார்த்தனர். பலர் உதய் கன்னத்தில் அன்பு அடையாளமாக முத்தம் கொடுத்த உணர்ச்சிகரமான காட்சிகள் அரங்கையே நெகிழச் செய்தன.












Click it and Unblock the Notifications