எனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார்! மருமகன் பற்றி மனம் திறந்த மாமியார் ஜோதி!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக மிக கடுமையாக உழைத்து வருகிறார் என அவரது மாமியார் ஜோதி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
தன்னை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலினை மாப்பிளையாக மட்டுமே பார்ப்பதாகவும் அவரை அமைச்சராகவோ அரசியல்வாதியாகவோ பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், தனது மருமகன் உதயநிதியிடம் இதுநாள் வரை அரசியல் பற்றி தாம் பேசியதே கிடையாது என்பதையும் ஜோதி தெரிவித்திருக்கிறார்.
என்.சி.சி. நிகழ்ச்சி
சென்னையில் நடைபெற்ற என்.சி.சி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமியார் ஜோதி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மருமகன் உதயநிதி செயல்பாடுகள் பற்றி மனம் திறந்து பாராட்டியுள்ளார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் உதயநிதியிடம் இருப்பதை அறிய முடிவதாகவும் மிக கடுமையாக மக்களுக்கு உழைத்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
மருமகன் உதயநிதி
மேலும், தனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலினிடமிருந்து இளைஞர்கள் இன்னும் எதிர்பார்ப்பதாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர் செய்வார், செய்ய வேண்டும் எனவும் ஜோதி கூறினார். இப்போது தானே அமைச்சராக வந்திருக்கிறார், அதனால் இன்னும் சில கால அவகாசம் தேவைப்படலாம் என தனது மருமகனை விட்டுக்கொடுக்காமல் மாமியாருக்கே உரிய பாணியில் பேசினார்.
அரசியல் பேசமாட்டேன்
உதயநிதியை மாப்பிள்ளையாக மட்டுமே பார்ப்பதாகவும் அவரிடம் அதை தாண்டி அரசியல் பற்றி எதுவும் பேசமாட்டேன் எனவும் ஜோதி தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதை தாம் வெறும் பெருமையாக மட்டும் கருதவில்லை என்றும், புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதே எப்படியெல்லாம் செயல்படுவாரோ என்ற பதற்றம் தான் தமக்கு வந்ததாக ஜோதி கூறியிருக்கிறார்.
கிருத்திகா உதயநிதி அம்மா
தனது மருமகன் உதயநிதியின் செயல்பாடுகள் மனநிறைவை தருவதாகவும் ஆனாலும் இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கிருத்திகா உதயநிதியின் தாயாரான ஜோதி கல்லூரி விரைவுரையாளராக பணியாற்றியவர் என்பதோடு என்.சி.சி. நிகழ்வுகளில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.