அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கு? சூடான உதயநிதி ஸ்டாலின்.. பிரஸ் மீட்டில் தடதடப்பு
சென்னை: திமுகவிடம் கேள்வி கேட்க அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்று சூடாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை எப்போதுமே சற்று கூலாக இருக்கக் கூடியவர். எந்தக் கேள்வியானாலும் சிரித்துக்கொண்டே நிதானமாக பதிலளிக்கக் கூடியவர். ஆனால் அப்படிப்பட்ட உதயநிதியே, அண்ணாமலை என்றதும் சற்று டென்ஷன் ஆகிவிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், 80% மகளிருக்கு பணம் கிடைக்காது என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லோரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறிய பிரதமர் மோடி 15 ரூபாயாவது கொடுத்திருக்கிறாரா என எதிர்கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், திமுக அரசின் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை பற்றி கேட்க அருகதை வேண்டும் என அண்ணாமலை மீது கடுப்படித்தார்.
அரசு கொடுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை விற்கக்கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஆளுநர் மீது நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அது குறித்து முதல்வர் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுப்பார் எனக் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications