ஏஆர் ரஹ்மான் கச்சேரி சர்ச்சை.. உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: வலதுசாரிகள் எப்போதுமே ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று காத்துக்கொண்டு இருப்பார்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதிகளவிலான கூட்டம் வந்ததை ஒரு காரணமாக சொல்கிறார்கள். நிறைய நிகழ்ச்சிகள் நடந்து உள்ளன. இதற்கு மேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்றார். அப்போது ஒரு செய்தியாளர், "சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை குறிவைத்து விமர்சனங்கள் வருவதை கவனித்தீர்களா? குறிப்பாக வலதுசாரிகள்." என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "எப்போதுமே அவர்கள் ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உண்மையான காரணம் யார் என்பதை கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்." என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் சனாதானம் குறித்து கேள்வி எழுப்ப, "சனாதனத்தை விடுங்க.. ஏழரை லட்சம் கோடி ஊழல் பற்றி பேசுவோமா? அதை பற்றி பேச தொடங்குங்கள். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுங்கள். சனாதனத்தை பற்றி பிறகு பேசுவோம். நான் இங்குதான் இருக்கப்போகிறேன்.
தொடர்ந்து 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம். அதை மட்டுமே இப்போது பேசாதீர்கள். கண்டிப்பாக அதை பற்றி பேச வேண்டும். ஆனால், அதைவிட மிக மிக முக்கியம் இப்போது இருக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். விரட்ட வேண்டும். தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்து வருகிறது. இப்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் தோற்று உள்ளார்கள். இதை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியாக அமையும். பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக இது இருக்கும். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் இப்படி தொடர் தோல்வி. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று வந்தால் ஒரே தோல்வியை பார்த்துவிட்டு மனசு திருப்தியாக இருக்கலாம் அல்லவா? தொடர்ந்து அடிவாங்குவதற்கு பதிலாக ஒரே நாளில் முடிந்துவிடும். எனவே ஆதரிக்கிறார்." என்றார்.












Click it and Unblock the Notifications