மொத்தம் 254.. டாக்டர், நர்சுகளுடன் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள்.. சென்னைக்கு சூப்பர் ஏற்பாடு
சென்னை: சென்னையில் மேலும் 81 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.
Recommended Video
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரசில்லா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் விஜயபாஸ்கர்.
பிறகு நிருபர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழக அரசால், கூடுதலாக 2 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக இவர்கள் இன்று பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.
3 லட்சத்தை கடந்தது மொத்த பாதிப்பு.. ஒரே நாளில் 11,400 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட இந்தியா
செவிலியர்கள் நியமனம்
சென்னையிலுள்ள, 5 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இவர்கள் பணிக்குச் சேர உள்ளனர். ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் கூடுதலாக 400 செவிலியர்கள் இதன் மூலமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிக பரிசோதனை
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளையும் உயர்த்துகிறோம். அதற்கு இணையாக மனித வளத்தையும் அதிகரிக்கிறோம். இதுவரை 6.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகமாக பாதித்துள்ள மகாராஷ்டிராவை விடவும், தமிழகத்தில் பரிசோதனைகள் அளவு அதிகம்.
254 வாகனங்கள்
ஏற்கனவே, 173 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் 81 வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 254 நடமாடும் வாகனங்கள் சென்னையில் உள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து இந்த கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் இருப்பார்கள். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த வாகனங்கள் சுற்றி வரும்.
மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை
சென்னையில் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருவதற்கு அரசின் மெத்தனம் காரணம் கிடையாது. தலை முதல் கால் வரையிலான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தால் கூட அதையும் மீறி சில மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.