"ஓ"ன்னு கதறி.. "இயேசு சிலுவையை சுமந்தார் இல்லையா, அந்த மாதிரி".. அழுத விஜயபாஸ்கர்.. மிரண்ட மக்கள்!
அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
சென்னை: "இந்த விஜயபாஸ்கருக்கு இந்த எம்எல்ஏ பதவியை நீங்கதான் தந்தீங்க.. மறுபடியும் நீங்க நினைச்சாதான் இந்த பதவியை வாங்கி தர முடியும்... உங்க முன்னாடி நடிக்க முடியாது.. உங்க கண்ணுல தண்ணீர் வரக்கூடாதுன்னு தான் இந்த விஜயபாஸ்கர் ஓடி ஓடி உழைக்கிறான்.. இதை நீங்க புரிஞ்சிக்கணும்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒரு விஐபி தொகுதியாகும்.. காரணம் சுகாதாரத்துறை அமைச்சர் இங்குதான் ஒவ்வொரு முறையும் போட்டியிடுவார்.. இப்போதும் களம் இறங்கி உள்ளார்.. இவருக்கு எதிராக திமுக சார்பில் தென்னலூர் பழனியப்பன் மறுபடியும் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவருமே தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகின்றனர்.. இருவருமே பலமானவர்கள்.. இருவருமே செல்வாக்கானர்கள்.. இதைவிட ஒற்றுமை, இவர்கள் இருவருமே சென்ட்டிமென்ட்டி பிழிந்து கசக்கி எடுப்பவர்கள்.
பழனியப்பன்
பழனியப்பன் பிரச்சாரம் செய்யும்போது அது சற்று வித்தியாசமாகவே இருக்கும்.. "என்னால விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டிபோட்டு கொண்டு பணம் செலவு செய்ய முடியாது.. ஏன்னா, விஜயபாஸ்கர் வெறும் பணத்தை நம்பி நிற்கிறார்.. ஆனால், நான் உங்களை நம்பி நிற்கிறேன்... உங்களுக்கே தெரியும், நான் இந்த 30 வருஷமாக இந்த தொகுதிக்குள் சென்றுவராத வீடே இல்லை.. எல்லார்கிட்டயும் பாசமாக பேசி வருகிறேன்..
ரத்தம்
வாழ்வோ, சாவோ, எனக்கு எல்லாமே இந்த மக்களோடு மட்டும்தான்... அதனால என்னை வெற்றி பெற வைத்து விடுங்கள்.. விஜயபாஸ்கருக்கு அவங்க அப்பா, அண்ணன், எல்லாரும் இருக்காங்க, எனக்கு நீங்கதானே இருக்கீங்க.. நான் கண்ணீர் சிந்த மாட்டேன், மாறாக ரத்தத்தை சிந்தி உங்களுக்காக உழைப்பேன்" என்று சொல்லி கொண்டே கதறி கதறி அழுதார்.. உடனே கட்சி துண்டு எடுத்து கண்களை துடைத்து கொண்டு, தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
விஜயபாஸ்கர்
இவர் இப்படி என்றால், விஜயபாஸ்கர் பாணி வேறு மாதிரியாக உள்ளது.. "ஓட்டுக்காக இங்கே நிறைய பேர் உங்க காலை பிடிப்பாங்க... கிளிசரினை கண்ணில் ஊத்தி அழுவாங்க.. ஆக்ஷன் காட்டுவாங்க.. எதையும் நம்பாதீங்க.. ஆனால், நான் 10 வருஷமா இந்த தொகுதி மக்களுக்காக உழைச்சு ஓடா தேஞ்சு, மாடா தேஞ்சு இருக்கேன்.. திரும்ப திரும்ப கொடுத்து, கொடுத்து உங்களுக்காக உழைச்சிக்கிட்டே இருக்கேன்.
தண்ணீர்
இந்த விஜயபாஸ்கருக்கு இந்த எம்எல்ஏ பதவியை நீங்கதான் தந்தீங்க.. மறுபடியும் நீங்க நினைச்சாதான் இந்த பதவியை வாங்கி தர முடியும்... உங்க முன்னாடி நடிக்க முடியாது.. உங்க கண்ணுல தண்ணீர் வரக்கூடாதுன்னு தான் இந்த விஜயபாஸ்கர் ஓடி ஓடி உழைக்கிறான்.. எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா என்ன? ஆயிரம் கஷ்டம் இருக்கு... நானே உங்ககிட்ட வந்து அழுது புலம்புனா நல்லாவா இருக்கும்? எனக்கு ஒரு பிரச்சனை இருக்குன்னா, அது என்னோட பிரச்சனை... மனசுக்குள்ளேயே வெச்சிப்பேனே தவிர, உங்ககிட்ட வந்து சொல்ல மாட்டேன்.." என்றார்.
உடல் எடை
அதேபோல, கல்குளத்துப்பட்டியில் பிரச்சாரம் செய்யும்போது விஜயபாஸ்கர் பேசியதைகேட்டு மக்கள் மலங்க மலங்க விழித்தனர்.. "கொரோனா காலத்தில் என்னுடைய உடல் எடை 7.5 கிலோ குறைந்து போயிடுச்சு.. எனக்கும் சுகர் இருக்கு.. பி.பி. இருக்கு.. மாத்திரை சாப்பிடறேன்... தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கு.. இருந்தாலும் என் மனசில் வெறி இருக்கு.. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காக செய்யணும்னு எண்ணம் இருக்கு... இயேசு சிலுவையை சுமந்தது போல் இந்த விராலிமலையை நான் சுமந்து கொண்டே இருக்கிறேன்.." என்றார்.
வழக்கு
குட்கா வழக்கு தலைதூக்கிய சமயம் விஜயபாஸ்கர் பதவிக்கே சிக்கல் என்ற நிலை எழுந்தது.. இதற்கு பிறகுதான் கொரோனா காலத்தில் இவரது செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.. ஒருகட்டத்தில் தவிர்க்க முடியாத தலைவராகவும் டாக்டர் விஜயபாஸ்கர் உருவெடுத்தார்.. ஆனால், அதற்கு பிறகு, விஜயபாஸ்கர் பற்றின பேச்சு அவ்வளவாக வெளிவரவில்லை.
போட்டோக்கள்
அதேசமயம் தொகுதிக்குள் ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வைத்திருக்கிறார்.. பொங்கல் பரிசு பொருட்களில் இவரது உருவம் பொறித்த போட்டோக்கள் ஆளும் தரப்பை சற்று கடுப்பேற்றினாலும், விஜயபாஸ்கருக்கு என்று தனி செல்வாக்கு சொந்த தொகுதியில் இருக்கத்தான் செய்கிறது.. எனினும், கடந்த 2 தேர்தல்களில் சொற்ப வாக்குகளிலேயே இவரது வெற்றி அமைந்திருந்தது.. பெரும்பான்மையான வெற்றியை தக்க வைக்க விஜயபாஸ்கர் மும்முரம் காட்டி வருவதாகவும் சொல்கிறார்கள்.. பார்ப்போம்..!