மு.க.அழகிரியை கண்டதும் ஓடி வந்து பேசிய அமைச்சர்கள்! உற்சாகமடைந்த குடும்பத்தினர்! மாறாத பழைய பாசம்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல முன்னாள் அமைப்பாளருமான மு.க.அழகிரியை கண்டதும், ஓடி வந்து பேசி தங்கள் பழைய பாசத்தையும், மரியாதையையும் இரண்டு அமைச்சர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரியிடம், அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், ஆவடி நாசரும் பவ்யமாக பேசி அவரை கார் வரை சென்று வழியனுப்பி வைத்திருக்கின்றனர்.
இதேபோல் உள் அரங்கில் மணமக்களை வாழ்த்திவிட்டு முன் இருக்கையில் சிறிது நிமிடம் அமர்ந்த மு.க.அழகிரிக்கு, திமுகவினர் வளைத்து வளைத்து வணக்கம் போட்டுக்கொண்டு இருந்தனர்.

திருமண வரவேற்பு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி தனது மனைவி, மகன், மருமகள், பேரன் என குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் மீது மு.க.அழகிரி அளவு கடந்த மரியாதை வைத்திருக்கக் கூடியவர். ஆரம்பகாலங்களில் தனக்கு தங்கபாண்டியன் மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பதால் இன்று வரை அவரது குடும்பத்தினருடன் நட்பு பாராட்டி வருகிறார் அழகிரி.

முன் வரிசையில்
அந்த வகையில் தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மணவிழாவில் தவறாமல் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் மு.க.அழகிரி. இந்நிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யின் சகோதரரும், தொழிற்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு மு.க.அழகிரியை வரவேற்று அழைத்துச்சென்றதுடன் அவர்களை முன் வரிசையில் உள்ள இருக்கைக்கு அழைத்துச்சென்று அமர வைத்தார். அப்போது அழகிரியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் அவருக்கு வணக்கம் வைக்கவும் திமுகவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.

அமைச்சர் நாசர்
இதனிடையே அங்கிருந்து எழுந்து காரை நோக்கி நடந்த மு.க.அழகிரியை அமைச்சர் தங்கம் தென்னரசு வழியனுப்பி வைப்பதற்காக உடன் சென்றார். அப்போது தங்கம் தென்னரசு கையை கட்டி நின்றதை பார்த்த அழகிரி, அவரிடம் ஏதோ சொல்லி தோளில் தட்டிக்கொடுத்தபடி சிரித்தார். அழகிரி கார் ஏறுவதற்காக போர்டிகோவில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், கடகடவென ஓடி வந்து பவ்யமாக வணக்கம் வைத்தார்.

குடும்பத்தினர் உற்சாகம்
அமைச்சர் நாசருக்கு பதில் வணக்கம் வைத்த மு.க.அழகிரி அவரிடமும் ஏதோ சொல்ல, அவரும் சிரித்தார். மு.க.அழகிரியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கட்சியினர் காட்டிய ஆர்வத்தை பார்த்தும், அவருக்கு வணக்கம் வைக்க வந்த கட்சி நிர்வாகிகளை பார்த்தும் மொத்த குடும்பத்தினரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications