அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பரபரப்பு.. நடந்தது என்ன?
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகருக்கு திரும்புவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
சுதந்திர தினம் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று தினங்கள் தொடர் விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர். இதனால் வெள்ளிக்கிழமை இரவு பெருங்களத்தூர் முதல் திண்டிவனம் வரை பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்றுடன் (திங்கள்கிழமை) விடுமுறை முடிவடைந்ததால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் (ஜிஎஸ்டி சாலை) நேற்று இரவு முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள ஓங்கூர் ஆற்றுப்பாலம் பழுது காரணமாக வாகனங்கள் அனைத்தும் ஒருவழி சாலையில் வந்து செல்வதால் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் வருவதால் நேற்று இரவு 7 மணி முதல் தற்போது வரை ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை காண முடிகிறது. இதன் காரணமாக, திண்டிவனத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.
கடும் போக்குவரத்து நெரிசலால் ஜிஎஸ்டி சாலையில் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் 4 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இதனால் அங்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வார இறுதி நாட்களில் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் வழியாகதான் செல்ல வேண்டி இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications