பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையப் போகிறது.. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 4 முனைப் போட்டிகளால் தமிழக அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.. இந்த சூழலில் "ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்" என்ற இயக்கம் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளது.. இதுகுறித்துதான் பார்க்க போகிறோம்.
ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்கிற முனைப்பில் திமுகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று அதிமுகவும் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன.

மற்றொருபுறம், முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இன்னொருபுறம், சீமானின் நாம் தமிழர் கட்சி தனது தனித்துவமான பரப்புரையால் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கியைப் பெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன..
4 முனை போட்டி தமிழகத்தில்
இந்த 4 முனைப் போட்டிக்கு மத்தியில், எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று பாஜக மேலிடம் அதீத ஆர்வம் காட்டி வருகிறது.. ஆனால், இந்த சூழலில் 'ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட்' என்ற இயக்கம் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளது..
2026 தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் சட்டமன்றத்தில் பாஜகவிற்கு ஒரு இடம் கூட இருக்கக் கூடாது என்பதே இந்த இயக்கத்தின் ஒற்றை லட்சியமாக உள்ளது.. நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாக இணைந்து, பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.. இது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான ஒரு சித்தாந்தப் போராகவே பார்க்கப்படுகிறது..
திராவிட கொள்கை
தமிழகத்தில் ஏற்கனவே திராவிடக் கொள்கைகளும், தமிழ் தேசியவாதமும் வலுவாக இருக்கும் நிலையில், இந்த ஜீரோ பிஜேபி மூவ்மெண்ட் கிரவுண்ட் லெவலில் அமைதியான அலையை உருவாக்க முயல்கிறது.. இது ஒரு பெரிய தேர்தல் இயந்திரம் கொண்ட இயக்கம் இல்லை என்றாலும், படித்த இளைஞர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு செலுத்தும் நபர்கள் மத்தியில் இது ஒரு தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது..
இதன் தரைமட்ட வலிமை என்பது வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பதிலோ அல்லது பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்துவதிலோ பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழக வாக்காளர்கள்
தமிழக வாக்காளர்கள் வரும் தேர்தலில் வெறும் பாஜகவை மட்டும் எதிர்த்துப் போராடப் போவதில்லை, மாறாக பாஜகவின் பின்னால் இருக்கும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளின் கூட்டு வலிமையையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய கருத்தாக உள்ளது.. தமிழகத்தின் மொழி சார்ந்த பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார தனித்துவத்தை காக்க மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும் என்று இந்த இயக்கம் பிரச்சாரம் செய்து வருகிறது.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என பலமான கட்சிகள் களத்தில் இருக்கும் நிலையில், இந்த புதிய இயக்கத்தின் பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் யாருக்கு சாதகமாக முடியும் என்பதும், தமிழக அரசியலில் இது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. சாதாரண பொதுமக்களும் அரசியல் ஆர்வலர்களும் 2026 தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்..












Click it and Unblock the Notifications