ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! பெருங்கூட்டத்தை திரட்டிய தமிமுன் அன்சாரி! ரிப்போர்ட் கொடுத்த உளவுத்துறை!
சென்னை: ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னெடுத்த பேரணி முதலமைச்சர் வரை கவனம் ஈர்த்திருக்கிறது.
காரணம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையே ஆகும்.
இதில் சிறப்பு என்னவென்றால் எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய பாமக, விசிக, தவாக, கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரே மேடையில் நின்றது தான்.

ஆயுள் சிறைவாசிகள்
அண்ணா பிறந்தநாளை ஒட்டி ஆண்டுதோறும் ஆயுள் சிறைவாசிகள் அவர்களது நன்னடத்தை அடிப்படையில் முன் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மீது பாரபட்சம் காட்டாமல் அவர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன் அரசுக்கு அழுத்தமும் கொடுத்து வருகிறார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.

கவனம் ஈர்ப்பு
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் சென்னையில் ஒரு பெருங்கூட்டத்தை திரட்டி அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சுமார் 500 பேர் வரை மட்டுமே ஆட்கள் திரள்வார்கள் என உளவுத்துறை எதிர்பார்த்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் திரண்டிருந்தார்கள். இதுமட்டுமல்லாமல் தமிமுன் அன்சாரியின் அழைப்பை ஏற்று தனியரசு, சுந்தரவள்ளி, உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

ஒரே மேடையில்
எல்லாவற்றுக்கும் மேலாக எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய பாமக, விசிக, தவாக, கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒரே மேடையில் நின்றது தான் தமிமுன் அன்சாரியை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இதனிடையே தங்களை கைது வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் பேரணியை நிறுத்தமாட்டோம் என தமிமுன் அன்சாரி காவல்துறையினரிடம் சூடாக பேசியதுடன் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை அருகே குரல் எழுப்பாமல் அமைதியாக பேரணி கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் கவனத்திற்கு
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையை வலியுறுத்தி தமிமுன் அன்சாரி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை உளவுத்துறை தீவிரமாக கவனித்து வருகிறது. இதனிடையே அவர்கள் மூலம் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னெடுத்த பேரணி முதலமைச்சர் வரை கவனம் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications