திருவடிக் குடில் சுவாமிகளை சந்தித்த தமிமுன் அன்சாரி! எதற்காக இந்தச் சந்திப்பு? பின்னணி இது தான்!
மயிலாடுதுறை: கும்பகோணத்தில் திருவடிக் குடில் சுவாமிகளை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி.
இதை படிப்பவர்களுக்கு அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது புரிகிறது.
மத நல்லிணக்கம், மது ஒழிப்பு ஆகிய இரண்டு விவகாரங்களுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கும்பகோணம் சாமிகள்
கும்பகோணத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூடம் என்ற பெயரில் அமைப்பு நிறுவி ஆன்மீகம், சமூக சேவை என செயல்படுபவர் திருவடிக் குடில் சுவாமிகள். சமூக நல்லிணக்கம், மது ஒழிப்பு பரப்புரை என செயல்படும் இவரது பணிகளை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இன்று திருவடிக் குடில் சுவாமிகளை சந்தித்து உரையாடினார்.

வகுப்பு வாதம்
அப்போது பிரபல அமெரிக்க எழுத்தாளரான மைக்கேல் H. ஹார்ட் எழுதிய 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர் ' என்ற புகழ் பெற்ற நூலை பரிசளித்தார். அதுபோல் சுவாமிகள், அவர் உரையாற்றியதன் தொகுப்பான 'மனித குலத்தின் முன் மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) ' என்ற நூலை தமிமுன் அன்சாரிக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து இருவரும், வகுப்புவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி பேசியிருக்கின்றனர்.

மது ஒழிப்பு கொள்கை
மது ஒழிப்பு கொள்கையில் உறுதியாக உள்ள திருவடிக் குடில் சுவாமிகள் மதுவை ஒழிப்பதற்கான தனது முயற்சிகள் பற்றி தமிமுன் அன்சாரியிடம் விளக்கிக் கூறியிருக்கிறார். அமைதி , நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக மஜக முன் எடுக்கும் முயற்சிகளுக்கு தாமும் தமது பக்தர்களுடம் முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்ற உறுதியையும் சிவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் வழங்கியுள்ளார்.

அரசியல் -ஆன்மிகம்
தமிமுன் அன்சாரியும் திருவடிக் குடில் சுவாமிகளும் சந்தித்து பேசியிருப்பது அரசியல், ஆன்மிகம் என இரண்டு தளங்களிலும் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவே இந்த சந்திப்பு என மனிதநேய ஜனநாயக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications